தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மனித கழிவுகளை அகற்றும் கழிவுநீர் வாகனம் மாநகராட்சியில் அனுமதி பெறவேண்டும்-மாநகராட்சி ஆணையர் தகவல்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு , கழிவு மேலாண்மை கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத்தை மேம்படுத்த கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் , மலக்கசடு , கழிவுநீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளன .
அதன்படி கழிவுநீர் அகற்றும் வாகன ஓட்டுநர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022 ம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது .
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் , இயக்கப்பட்டு வரும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் மேற்படி பணிக்கான அனுமதி பெற தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் . இதற்கான விண்ணப்பப் படிவத்தினை மாநகராட்சி அலுவலக வேலை நேரங்களில் பொது சுகாதாரப்பிரிவில் பெற்றுக் கொள்ளலாம் .
இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ .2000 / - செலுத்தி சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அடிப்படையில் உரிய அனுமதி பெற்று இயக்கப்பட வேண்டும் . கழிவு நீர் தொட்டிகள் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற்று இயக்க வேண்டும் . உரிமம் இல்லாமல் இயக்குவது கண்டறியப்பட்டால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு நீதிமன்றம் மூலம் வழக்குபதிவு செய்து , சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.