தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் தூத்துக்குடி மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்!.

தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் தூத்துக்குடி மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்!.

தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மாநகர் பகுதியில் குடிநீர் விநியோகிக்கும் முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இதனால் சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை சரிசெய்யும் வகையில், வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு , நீரேற்று நிலையம் ஆகியவற்றை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் சரவணன், திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாநகர மக்களுக்கு ஒரு சில இடங்களில் தினசரியும், சில இடங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடைகாலத்திலும் முடிந்தளவு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் தற்போது வரை மழை இல்லாததால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் ஒரு நாள் தாமதமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 62 எம்எல்டி அளவு தண்ணீர் தேவையாகும். ஆனால் தற்போது 20 எம்எல்டி தண்ணீர் தான் கிடைக்கிறது. இது குறித்து வல்லநாடு நீரேற்று நிலையம், உரைகிணறு ஆகியவறில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூடுதல் நீர் பெறுவதற்கான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில தினங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதுவரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.