தூத்துக்குடியில் மாவட்டங்களுக்கு இடையிலான இறகுபந்து போட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி சின்னமணி நகர் இறகுபந்து விளையாட்டு கழகம் சார்பில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டிகள் தூத்துக்குடி அசோக் நகரில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டலம் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டி துவக்கவிழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட இறகு பந்து தலைவர் பி.எஸ்.டி.எஸ்.டி.வேல் சங்கர் தலைமை தாங்கினார்.
வ.உ.சி. கல்விக்கழக டைரக்டர் ஏ.பி.சி.வி. சண்முகம் முன்னிலை வகித்தார். சின்னமணி நகர் இறகுபந்து விளையாட்டு கழகம் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான சந்திரபோஸ் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி போட்டியை தொடங்கி வைத்து, வீரர்களை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இறகு பந்து கழக தலைவருக்கு சின்னமணி நகர் இறகுபந்து விளையாட்டு கழகம் சார்பில் மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் பொன்னப்பன், தொழிலதிபர்கள் லட்சுமணன், சேகர், லெனின், செல்டன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குமார முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் சிஎம்என் கிளப் செயலாளர் ரமேஷ் கார்த்திகேயன் நன்றி கூறினார். இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 55 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.