முதல்வரின் காலை உணவுத் திட்டம், திமுக அரசின் மிகப்பெரிய சாதனை திட்டம் - கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்!.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் இன்று (15.07.2024) முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைத்தார்.
அதன்படி தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி, ஆரோக்கியபுரம் வி.வி.டி நினைவு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் காலை உணவு வழங்கி துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
பின்னர் கனிமொழி கருணாநிதி எம்பி தெரிவித்ததாவது;
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினமான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். காலை உணவு திட்டத்தினை உண்மையிலேயே இந்த அரசின் மிகப் பெரிய சாதனையாக நாம் பார்க்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்த்தில் இத்திட்டத்தின்கீழ் 40018 மாணவ, மாணவியர்கள் பயன்பெறுகிறார்கள். பிள்ளைகளுக்கு காலை உணவு என்பதுமிகவும் முக்கியமான ஒன்று. காலை உணவு சாப்பிடாத பிள்ளைகள் பாடத்தினை கவனிக்க முடியாமல் இருப்பார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருதி, அவர்கள் நல்லமுறையில் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக கல்வி பயிலக்கூடிய தலைமுறையாக உருவாக வேண்டும், வளர்ச்சி குறைபாடு இல்லாத குழந்தைகளாக உருவாக வேண்டும் என்று இத்திட்டத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என கனிமொழி கருணாநிதி எம்பி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்ததை முதலில் சில ஒன்றியங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் தொடங்கி வைத்த பின்பு, திட்டத்தினை ஆய்வு செய்ததில் குழந்தைகளின் கல்வித்திறன், வருகை அதிகரித்திருந்தது. அதேபோல் பெற்றோர்களின் சுமை குறைந்து அவர்கள் வேலைக்கு செல்ல முடிகிறது. மேலும் குழந்தைகள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வரக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது. எதிர்கால தலைவர்களாக வரக்கூடிய மாணவர்களை ஊட்டச்சத்து மிக்கவர்களாக உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறியதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர், அத்தனை அரசு தொடக்கப்பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார்கள். பின்னர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டின் போது முதலமைச்சர் அறிவித்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்ட தினமான பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தில் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள். காமராஜர் பிறந்ததினத்தை சிறப்பிக்கும் வகையில் இன்று காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்துள்ளார்கள்.
இத்திட்டத்தின்மூலம் தமிழ்நாடு முழுவதும் 20,73,000 குழந்தைகள் பயனடைகிறார்கள். இன்றைக்கு மட்டும் அரசு உதவி பெறும் 3991 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த குழந்தைகள் பயனடைகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் 546 பள்ளிகளில் 20,848 குழந்தைகள் பயனடைகிறார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பிற மாநிலங்களில் மட்டுமல்லாமல் உலகளவிலும் வரவேற்கக்கூடியதாக உள்ளது. முதலமைச்சர் இத்திட்டத்தினை அனைவரும் இணைந்து நல்ல முறையில் செயல்படுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே நாம் அனைவரும் இணைந்து இத்திட்டத்தினை நல்ல முறையில் செயல்படுத்திட வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, வருவாய் கோட்டாட்சியர் பிரபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார், ஊராட்சி உறுப்பினர்கள் ஸ்டாலின், பாரதிராஜா, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ் பாலன், ஆரோக்கியபுரம் வி.வி.டி. நினைவு தொடக்கப்பள்ளி செயலர் பிரம்மானந்தம், மகளிர் திட்டம் அலுவலர் மல்லிகா,முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, உதவி திட்ட அலுவலர்கள்(மகளிர் திட்டம்) கனகராஜ், கிருஷ்ணகுமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.