தமிழ்நாடு அரசு 2026–27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.16 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு பனை மேம்பாட்டு கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்று, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு பாராட்டு, வாழ்த்து மற்றும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையிலேயே பனைத் தொழிலின் வளர்ச்சி மற்றும் பனை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ரூ.16 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு பனை மேம்பாட்டு கழகம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க மற்றும் தொலைநோக்கு பார்வையுடைய நடவடிக்கையாகும்.
இந்தக் கழகம் அமைக்கப்படுவதன் மூலம் பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட பாரம்பரிய பனைப் பொருட்களுடன், மதிப்புக் கூட்டப்பட்ட புதிய பனைப் பொருட்களின் உற்பத்திக்கும் சந்தைப்படுத்தலுக்கும் ஊக்கம் கிடைக்கும். இதன் மூலம் பனை விவசாயிகள், பனைத் தொழிலாளர்கள் மற்றும் இந்தத் தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், அவர்களின் வருமானமும் உயர வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பனை மரங்களை பாதுகாப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும் நிலையில், பனைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அரசு மேற்கொண்டுள்ள இந்த அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் சார்பிலும், பனை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பிலும் மனமார்ந்த பாராட்டு, வாழ்த்து மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் எஸ்.ஜே. கென்னடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.